articles

‘மக்களோடு மக்களாக பணியாற்றும் செயல்வீரர்களின் கட்சி’

1936 ஆம் ஆண்டு தமிழகத்தில் 9 பேர் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை உருவாக்கிய தலைவர்களில் தோழர் பி.ராமமூர்த்தியும் ஒருவர். முதல் தலைமுறை தலைவர்களில் என்.சங்கரய்யா, நூற்றாண்டைக் கடந்து வாழும் வரலாறாகத் திகழ்கிறார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து, தற்போது விழாவில் டி.கே.ரங்கராஜன், எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கட்சியின் மாநில, மாவட்ட தலைமைகளில் இரண்டாவது, மூன்றாவது தலைமுறை தோழர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த தலைமுறைக்கு மகத்தான கடமை உள்ளது.

கட்சி என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய முழுநேர ஊழியர்களால் மட்டும் இயக்கக்கூடிய அமைப்பு அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்களோடு மக்களாக இருந்து செயல்படும் செயல்வீரர்களை கொண்டது. முழுநேர ஊழியர்கள் பணி அர்ப்பணிப்போடு கூடியது மட்டுமல்ல, கட்சி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார். அத்தகைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் பி.ராமமூர்த்தி.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து அன்றைய சென்னை மாகாண சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்  பி.ஆர்,  நாகிரெட்டி, கே.பி.கோபாலன், எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர்.  அறிவியல் பூர்வமான, தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தி அவர்கள் பேசினர். மார்க்சிய லெனினியப் பாதையை வகுப்பதில் மக்கத்தான பங்காற்றியவர் பி.ஆர். முதல் தலைமுறை தலைவர்களான எம்.ஆர்.வி., பி.ஆர். போன்றோரைப் போற்றுவது, மரியாதை செலுத்துவதோடு, அவர்களது லட்சியங்களை நிறைவேற்றுவோம்.